குடிகார கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி…!!
சென்னை மகாகவி கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 35). இவர் நேற்று மாலை 3 மணி அளவில் தனது மகன், மகளுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். மகன், மகள் தலை மீது மண்எண்ணெய் ஊற்றிவிட்டு, தன்னுடைய தலையிலும் கவுசல்யா மண்எண்ணெய் ஊற்றினார். பின்னர் மகன், மகளுடன் கவுசல்யா தீக்குளிக்க முயற்சித்தார்.
உடனே அங்கு காவலுக்கு நின்ற பெண் போலீசார் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினார்கள். அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி கழுவி விட்டனர். பின்னர் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், தனது கணவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர். நிறைய பெண்களுடனும் தொடர்பு உள்ளது. ஊர்க்காவல் படையில் வேலை செய்யும் அவர், தினமும் போதையில் வந்து என்னையும், எனது குழந்தைகளையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்கிறார். தினமும், செத்து, செத்து பிழைக்கும் நாங்கள் ஒரேயடியாக செத்துப்போக முடிவு செய்து இங்கு வந்தோம். ஏற்கனவே எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தும் போலீசில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை நிம்மதியாக வாழவிட வழிவகை செய்ய வேண்டும் என்று கவுசல்யா கோரிக்கை வைத்தார்.
அவரையும், அவரது குழந்தைகளையும் வேப்பேரி போலீசார் அழைத்துச்சென்றனர்.
Average Rating