மனைவியை கடத்திய கணவன் உட்பட ஒன்பது பேருக்கு விளக்கமறியல்..!!
வல்வெட்டித்துறை, கம்பர்மலை பகுதியில் தனது மனைவியை ஆட்களை வைத்து கடத்திய கணவன் உட்பட 9 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா, எதிர்வரும் 28ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணித்தார்.
புதன்கிழமை (14) பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு தாபரிப்பு வழக்குக்காக சென்றுவிட்டு தாயாருடன் திரும்பி பெண்ணை அவரது கணவன் கூலியாட்களை வைத்து வான் ஒன்றில் கம்பர் மலை பகுதியில் வைத்து கடத்தியிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பெண்ணின் தாயார் செய்த முறைப்பாட்டினை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வல்வெட்டிதுறை பொலிஸார் புத்தூர் பகுதியிலுள்ள சட்டத்தரணியொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, வியாழக்கிழமை (15) மீட்டிருந்தனர்.
அத்துடன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அவரது கணவன் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்திருந்ததுடன், வான் ஒன்றினையும் மீட்டிருந்தனர்.
குறித்த நபர்களை, வெள்ளிக்கிழமை (16) பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Average Rating