எக்னெலிகொடவின் சடலம்கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு..!!
கடத்திச் செல்லப்பட்ட பிரபல ஊடகவியலாளர் எக்னெலிகொட வெலிகந்த மனம்பிட்டி என்னும் இடத்தில் காணப்பட்ட இடைக்கால இராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு பின்னர், அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட எக்னெலிகொடவின் சடலம், திருகோணமலை கடற்பரப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவப் புலனாய்வுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி ஊடக இணையத்தளங்கள் இந்த செய்தியினைக் குறிப்பிட்டுள்ளன
கொலை செய்யப்பட்ட எக்னெலிகொட முன்னதாக சேறுவில பிரதேச சகதி குழியொன்றில் புதைக்கப்பட்டதாகவும், சடலம் மேலே வந்ததன் காரணமாக சடலத்தை திருகோணமலை கடற்பரப்பில் வீசி எறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சேறுவில பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாம் கருணாவினாலும், கருணாவிற்கு பின்னர் பிள்ளையானினாலும் நிர்வாகம் செய்யப்பட்டு வந்த நிலையில், 2010ம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த முகாம் அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு சேறுவில முகாமில் ஒப்படைத்த போது, அந்த முகாமின் பொறுப்பாளராக பிள்ளையான் செயற்பட்டதுடன், இந்த முகாமில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முக்கிய அமைச்சர் ஒருவர் இந்த விசாரணைகளுக்கு இடையூறு செய்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Average Rating