பிரான்ஸ் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற அகதி: ரயில் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த கோர சம்பவம்…!!
பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியேறி பிரித்தானிய நாட்டிற்கு செல்ல முயன்ற அகதி ஒருவர் எதிர்பாராதவிதமாக ரயில் மீது மோதி உருக்குலைந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு கெலைஸ் நகருக்கு அருகில் மத்திய கிழக்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்க உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 4,000 புலம்பெயர்ந்தவர்கள் முகாம்கள் அமைத்து தங்கி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் குடியேற பெரும்பாலான அகதிகள் விரும்புவதில்லை என்பதால், அங்கிருந்து தப்பி ரயில் மார்க்கமாக பிரித்தானிய நாட்டிற்கு நுழையும் முயற்சி சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை கெலைஸ் நகருக்கு அருகில் உள்ள Coquelles என்ற பகுதியில் பிரித்தானியாவிலிருந்து வரும் ரயிலில் தப்பி விட வேண்டும் என நபர் ஒருவர் திட்டமிட்டு அங்கு வந்துள்ளார்.
ஆனால், துரதிஷ்டவசமாக அந்த நபர் ரயில் மீது விபத்துக்குள்ளானதில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ரயிலில் மோதிய வேகத்தில் அவரது உடல் சக்கரங்களில் சிக்கிகொண்டதால், உடல் சிதைந்தவாறு 400 மீற்றர்கள் தூரத்திற்கு இழுத்து சென்றுள்ளது.
உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், நபரின் வயது, எந்த நாட்டை சேர்ந்தவர் உள்ளிட்ட எந்த தகவலையும் பொலிசாரால் பெற முடியவில்லை.
நடப்பாண்டு யூன் மாதம் முதல் ரயில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16 என்ற எண்ணிக்கையில் அதிகரித்திருப்பது பொலிசார் மத்தியில் மட்டுமின்றி ரயில் ஓட்டுனர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறுகிய நாட்களில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாவதால், அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமலும் பணியை தொடருவதற்கு கூட வேதனையாக இருக்கிறது என சில ரயில் ஓட்டுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், இதே பகுதியில் தொடர்ச்சியாக அகதிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதற்கு எதிராக பொலிசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating