பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும்; இலங்கையிடம் இந்தியா கோரிக்கை!!
பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் முக்கிய குற்றவாளி ஆவார். அவரை இந்த வழக்கு விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் விடுதலைப்புலிகள் பற்றிய மத்திய அரசின் நிலையை தெரிவிக்குமாறு அவர் கூறியிருந்தார். இதுதொடர்பாக சுப்பிரமணிய சாமிக்கு வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் சிவசங்கர் மேனன் கூறி இருப்பதாவது:- தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றிய மத்திய அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. நமது நிலையை இலங்கை அரசும் முற்றிலும் உணர்ந்துள்ளது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை ஒப்படைக்குமாறு இலங்கைக்கு இந்தியா அவ்வப்போது முறைப்படி வேண்டுகோள் விடுத்து வருகிறது. இந்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாக இலங்கை அரசும் கூறியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.