மண்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான வாகனங்கள்: மீட்பு பணிகள் தீவிரம் (வீடியோ இணைப்பு)…!!
கலிஃபோர்னியா பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் திடீரென பெய்த கனமழையால் முக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மாநில சாலை எண் 58-ல் 30 மைல்கள் அளவுக்கு சகதியும் சேறும் சூழ்ந்து அதில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கியுள்ளது.
சில பகுதிகளில் வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு சேறு நிறைந்து காணப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
பெருமழையில் அகப்பட்ட பலரும் தாங்கள் வீடு போய் சேரமாட்டோம் என எண்ணியதாகவும், வாகனத்தை செலுத்துவதே பெரும்பாடாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மீட்புக்குழுவினர் சகதியில் சிக்கிய வாகனங்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் குப்பைகள் மற்றும் மணல்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Los Angeles பகுதியில் மண்சரிவில் சிக்கியிருந்த 14 பொதுமக்கள் மற்றும் வளர்ப்பு மிருகங்கள் சிலவற்றையும் உள்ளூர் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் வீடு வீடாக சென்று எவரேனும் சிக்கியுள்ளனரா எனவும் உள்ளூர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர்.
கலிஃபோர்னியா பகுதியில் பெய்துள்ள பெருமழைக்கு எல் நினோதான் காரணமென முடிவுக்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர், மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Average Rating