60 அடி உயர மாடியில் இருந்து பூனையை தூக்கி வீசியவருக்கு ஜெயில் தண்டனை
இங்கிலாந்து நாட்டில் உள்ள பெர்மிங்காம்நகரில் வசிக்கும் கிறிஸ்டோபர் லீ (வயது 18), தனது நண்பர்களுடன் சேர்ந்து விபரீத விளையாட்டில் ஈடுபட்டார். 60 அடி உயரமுள்ள மாடியின் பால்கனியில் இருந்து ஒரு பூனையை தூக்கி வீச அதை வீடியோவில் படம் பிடித்தனர். ஒரு முறையல்ல, 4 முறை இப்படி செய்தனர். இதில் பூனைக்கு காயம் ஏற்பட்டது. அதன் மூளையில் சேதம் அடைந்திருப்பதாக கால்நடை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அந்த பூனைக்கு சிகிச்சையும் அளித்தனர்.
இது தொடர்பாக கிறிஸ்டோபர் லீ மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மிருகவதை செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்டோபர் லீக்கு 4 மாதம் ஜெயில் தண்டனை விதித்தார். மேலும் அவர் 5 ஆண்டுகளுக்கு எந்த செல்லப்பிராணியையும் வளர்க்க கூடாது என்றும் உத்தரவிட்டார்.
மற்ற 3 பேரும் அவரை விட வயது குறைந்த சிறுவர்கள் என்பதால் வழக்கு சிறுவர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு அங்கு அக்டோபர் 1-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. தாங்கள் செய்த குற்றத்தை அந்த 3 பேரும் ஒப்புக்கொண்டு விட்டனர். தண்டனை கிடைக்குமா? என்பது நீதிபதியின் முடிவில் இருக்கிறது.