அம்மாவைக் காணவில்லை எனத் தவித்த சிறுவனுக்கு ஆறுதலளித்த காவலர்..!!
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச அரிசித் திருவிழாவில் அம்மாவைக் காணாமல் தவித்த சிறுவனுக்கு ஆறுதலாக இருந்த காவலர் அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றார்.
டேவிட் டெய்லர் என்கிற காவலர், இந்தத் திருவிழாக் கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்தக் கூட்டத்தில் தனியே அழுதுகொண்டிருந்த சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு அவனது தாயைத் தேடத் தொடங்கினார்.
சிறிது நேரத்துக்குள் சிறுவன் தூங்கத் தொடங்கியதும், அவனைத் தனது தோளிலேயே தூங்க வைத்து மீண்டும் அவனது தாயைத் தேடினார். இந்தக் கூட்டத்தில் இருந்த யாரோ இந்தக் காவலரின் செயல்களை புகைப்படமாய் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
சிறுவன் தொலைந்த அரைமணி நேரத்தில் மீண்டும் அம்மாவுடன் சேர்த்து வைத்துவிட்டார். அதேவேளை சமூக வலைதளத்தில் காவலருக்கு பாராட்டுகள் பெருகிக்கொண்டிருந்தது.
இது தொடர்பாக காவலர் டேவிட் கூறும்போது, ‘சக காவலர்கள் செய்யும் வேலையைத்தான் நானும் செய்தேன். ஒரே வித்தியாசம், எனது செயல்கள் யாரோ ஒருவரால் படம்பிடிக்கப்பட்டதுதான்!’ என அடக்கமாகக் கூறுகின்றார்.
பணியை விரும்பிச் செய்யும் இதுபோன்ற காவலர்கள்தான் எல்லோருக்கும் தேவை.
Average Rating