பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் மதத்தலைவர் படுகொலை
பாகிஸ்தானில், பெரும்பான்மையாக உள்ள சன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதில் இதுவரை ஏராளமான பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள கராச்சி நகரில் ஷியா முஸ்லிம்களின் தலைவர் ஒருவர் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். அவரது பெயர் அல்லமா ஹசன் துராபி.
இஸ்லாமி தெரிக் என்ற இயக்கத்தின் தலைவரான இவர், பாலஸ்தீனம், லெபனான் நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கராச்சியில் நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு விட்டு ‘ஜீப்’ காரில் வீடு திரும்பினார். வீட்டு வாசலில் காரை விட்டு இறங்கிய போது அங்கு நின்று கொண்டு இருந்த மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் அவர் மீது வெடிகுண்டை வீசினான். ஆனால் அது வெடிக்க வில்லை. உடனே அவன் துராபியை நெருங்கிச் சென்று தனது உடலில் கட்டி இருந்த சக்தி வாய்ந்த பிளாஸ்டிக் வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இதில் துராபி, அவரது உறவினர் ஒருவர், மற்றும் அவரது பாதுகாவலர் ஆகிய 3 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் 2 போலீசார் காயம் அடைந்தனர். மனித வெடிகுண்டாக வந்த நபரும் உடல் சிதறி செத்தான்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. சிதறிய மனித வெடிகுண்டு தீவிரவாதியின் உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
அவனைப்பற்றி துப்பு கொடுத்தால் ரூ.40 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்து உள்ளது. இந்த படுகொலை சம்பவத்தை தொடர்ந்து கராச்சி நகரில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. பஸ்,கார்களுக்கு தீவைக்கப்பட்டது. போக்குவரத்து சிக்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.
துராபின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கும்படி ஷியா பிரிவு தலைவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.