வில்லாபுரத்தில் வீட்டின் பீரோவை உடைத்து 50 பவுன் நகை–பணம் கொள்ளை…!!
மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் சஞ்சீவி தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது61), நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் குமரன் (31) செங்கல்பட்டு பரனூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக தந்தை விஸ்வநாதன் அங்கு சென்று விட்டார்.
வீட்டில் விஸ்வநாதனின் மனைவி இந்துமதியும், மருமகளான நிறைமாத கர்ப்பிணி துர்க்காவும் தனியே இருந்தனர்.
நேற்று இரவு 9 மணி அளவில் துர்க்காவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை புதூரில் உள்ள மருத்துவமனைக்கு இந்துமதி அழைத்து சென்றார். மருத்துவமனைக்கு செல்லும் அவசரத்தில் வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகிலேயே வைத்து விட்டு சென்றனர்.
இன்று காலை வீடு திரும்பிய இந்துமதி கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சாவியை வைத்து கதவை திறந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் இந்துமதி புகார் செய்தார். போலீஸ் உதவி கமிஷனர் பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் சவுந்திரபாண்டி, ஏட்டு தமிழ் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் சேரனும் வரவழைக்கப்பட்டது.
தொடர்ந்து நகை–பணம் திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating