நத்தம் அருகே நாக ரத்தின கல் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது…!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள பெரியமலையூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). இவர் கடந்த 18–ந் தேதி மகன் கணேசனுடன் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இவர்களை பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் பழனிச்சாமியை கடத்தி சென்று விட்டனர்.
அதன் பின் கணேசனிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் உனது தந்தையை விடுவிப்போம் என மிரட்டியுள்ளனர்.
இது குறித்து கணேசன் நத்தம் போலீசில் புகார் அளித்தார். நேற்று நத்தம் அருகில் உள்ள வேம்பரளியில் உள்ள ஒரு மாந்தோப்பில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக ஒரு கும்பல் இருந்ததை கண்டு சுற்றி வளைத்தனர்.
போலீசாரைக் கண்டதும் அதில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட மதுரையைச் சேர்ந்த பிரசாத் (25), ராமநாதபுரத்தைச் சேர்ந்த துரைமுருகன் (27) ஆகிய 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெரியமலையூரைச் சேர்ந்த பழனிசாமி, தங்கையா, பாக்கியராஜ், பழனிச்சாமி (33), பால்சாமி (40), சுந்தர்ராஜன் (40), செல்வம், நாகராஜ், பொன்னன் ஆகியோர் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு நாகரத்தின கல் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் அதனால் பழனிச்சாமியிடம் தாங்கள் கொடுத்த பணத்தை தொடர்ந்து கேட்டு வந்ததாகவும் அந்த பணத்தை தராததால் அவரை கடத்தி சென்றதாகவும் தெரிய வந்தது.
இவ்வழக்கில் தங்கையா, பாக்கியராஜ், பழனிச்சாமி, பால்சாமி, சுந்தர்ராஜ் உள்பட 7 பேர்களை போலீசார் கைது செய்தனர். மதுரையை சேர்ந்த அய்யப்பன், மணி உள்பட 5 பேரை தேடி வருகின்றனர். நத்தம் பகுதியில் நாகரத்தினகல், இருதலைமணியன் பாம்பு, சஞ்சீவி வேர் போன்றவை தருவதாக மோசடி செய்யும் கும்பல் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இவர்களை போலீசார் தீவிர கண்காணிப்பு செய்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Average Rating