ரெயில்வே ஊழியர் தற்கொலை
சென்னை அயனாவரத்தில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த ரெயில்வே ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அயனாவரம் பணந்தோப்பு ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 43). இவருடைய மனைவி ஜெகாதேவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ்குமாருக்கு குடிபழக்கம் இருந்ததால் கணவன்மனைவிக்கு இடையே தினமும் சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இதில் கடந்த 3 மாதத்திற்கு முன் ஜெகாதேவி தன் கணவனை விட்டு பிரிந்து குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தாராம். இதனால் மனமுடைந்த ரமேஷ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன் ஜெகாதேவியிடம் தொலைபேசி மூலம் சமதானமாக பேசினாராம். இதையடுத்து ஜெகாதேவி நேற்று மாலை தன் வீட்டிற்கு வந்தாராம். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததையடுத்து கதவை தட்டியிருக்கிறார்.வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தார் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு அழுகிய நிலையில் ரமேஷ்குமார் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்து ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீடு சென்றதால் ரமேஷ்குமார் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.