எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சாவு…!!
குன்றத்தூர் அருகே உள்ள சோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி திவ்யா (25). இந்த தம்பதிக்கு சந்தோஷ் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் திவ்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு அடுத்த மாதம் பிரசவம் நடக்கலாம் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் திவ்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 18–ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் குணமாகாததால் எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி அங்குள்ள டாக்டர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து திவ்யா எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு திவ்யாவுக்கு 22–ந்தேதி இரவு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திவ்யா இன்று காலை 6 மணி அளவில் இறந்து போனார்.
டாக்டர்களின் அலட்சியத்தால் திவ்யா இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இது குறித்து புகார் தெரிவிக்க திவ்யா கணவர் மணி, தாய் கவிதா மற்றும் உறவினர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு திவ்யா தாய் கவிதா அளித்த புகார் மனுவில், ‘‘டாக்டர்கள் அலட்சியத்தால் எனது மகள் இறந்து விட்டார். அவள் இறந்ததற்கான காரணத்தை சொல்ல டாக்டர்கள் மறுக்கிறார்கள். இதுபற்றி கேட்டால் அலட்சியமாக இருப்பதுடன் போலீசை வைத்து எங்களை விரட்டினர். எனவே எனது மகள் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதுபற்றி போலீசில் புகார் செய்தால் உங்கள் மகள் பிணத்தை 3 நாள் கழித்துதான் கொடுப்போம் என்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மிரட்டியதாக புகாரில் கவிதா தெரிவித்து இருந்தார்.
Average Rating