குழந்தையை கொன்று தாய் தற்கொலை: கணவரிடம் உதவி கலெக்டர் விசாரணை…!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வள்ளலார்நகர் கம்பர் தெருவை சேர்ந்த திருமால் மகன் சர்மா (வயது 27). குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
குடியாத்தம் அசோக் நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி, கார் டிரைவர். அவரது மகள் கவிதா என்கிற துளசி (22). பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார்.
சர்மாவும், கவிதாவும் காதலித்து வந்தனர். அவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் 11.09.2013 அன்று திருமணம் நடைபெற்றது. கவிதா பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு கவிதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு உத்ரா என பெயரிட்டிருந்தனர். பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த கவிதா கடந்த 21–ந் தேதி புதன்கிழமை மாலை கணவர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கவிதா தனது குழந்தையை கொன்று தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.எம்.சங்கரன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், வீரப்பன், ஜனார்த்தினி, ரவி உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கவிதா மற்றும் குழந்தை உத்ராவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவிதாவிற்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கவிதா தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து உருக்கமான கடிதம் எழுதி வைத்ததாக தெரிகிறது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது? என்பது தொடர்பான உறுதியான தகவல் வெளியாகவில்லை. கவிதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏதாவது தகராறு எழுந்து அதில் ஏற்பட்ட விரக்தியில் குழந்தையை கொன்று கவிதா தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே இது தொடர்பாக விசாரிக்க குடியாத்தத்தில் இருந்து கவிதாவின் கணவர் சர்மாவை வேலூருக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating