சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பெண்கள் உடல் கருகினர்…!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் கருப்பையா என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் தீபாவளியையொட்டி பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்று மதியம் பெண்கள் உள்பட 35 பேர் ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த பச்சையம்மாள் (வயது60), சத்தியவேணி (40) ஆகியோர் தனி அறையில் சரவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆலையின் வளாகத்தில் தயாரிக்கப்பட்டு வைத்திருந்த வெடிகளை வெடித்து சோதனை செய்து கொண்டிருந்தனர். இதில் சிதறிய தீப்பொறி, சரவெடி தயாரிக்கும் அறையில் விழுந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பச்சையம்மாள், சத்தியவேணி ஆகியோர் உடல் கருகினர்.
உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் விரைந்து செயல்பட்டு 2 பெண்களையும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ், சப்–இன்ஸ்பெக்டர் சுரேந்திர குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating