மயிலம் அருகே டிப்பர் லாரி மீது கார் மோதி டிரைவர் சாவு…!!
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அல்டாப் (வயது 24). இவரது நண்பர்கள் அஜி (34), சன்னி (37), அயூப் (38).
இவர்களுடைய நண்பர் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் விடுமுறையில் ஊர் திரும்புகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரை நேரில் வரவேற்று அழைத்து வருவதற்கு அல்டாப் மற்றும் அவரது நண்பர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று அல்டாப், அஜி, சன்னி, அயூப் ஆகியோர் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். டிரைவர் காதர் (38) அந்த காரை ஓட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் இன்று காலையில் வந்தபோது முன்னால் செங்கற்கள் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி சென்றது.
அதனை முந்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக அந்த லாரியின் பின்புறம் கார் மோதி சேதமடைந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே டிரைவர் காதர் பலியானார். காரில் பயணம் செய்த அல்டாப், அஜி, சன்னி, அயூப் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்தை அறிந்தவுடன் அந்த பகுதியினர் ஓடி வந்தனர். காயமடைந்த 4 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அல்டாப், அயூப் ஆகியோர் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அஜி, சன்னி ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மயிலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating