சொத்து தகராறில் வாலிபர் எரித்துக்கொலை
சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தில் மூன்று சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் சுந்தர் என்ற வாலிபர் எரித்துக் கொல்லப்பட்டார். தனசேகரன் (வயது 38), ராஜேந்திரன் (வயது 34), அசோகன் (வயது 30) ஆகிய மூன்று சகோதரர் களுக்கும் கடந்த சில காலமாகவே சொத்தை பிரித்து கொள்வதில் தகராறு இருந்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தூங்கி கொண்டிருந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மைத்துனர் சுந்தர் ஆகிய இருவர் மீதும் தனசேகரன் தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் கடும் தீக்காயம் அடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சுந்தர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேந்திரன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று சகோதரர்களும் வாகனங்களின் டயர்களுக்கு பஞ்சர் பார்க்கும் கடை நடத்தி வருகின்றனர். அவர்களுடைய தாயார் பெயர் அம்சா அம்மாள். இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். குடும்ப சொத்துக்களை பிரித்து கொள்வதில் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மூத்த சகோதரர் தனசேகரனை தனிக்குடித்தனம் செல்லு மாறு ராஜேந்திரனும், அசோகனும் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.