புறா திருடிய சிறுவனின் மரணம்: தற்கொலை தான் எனக்கூறிய முதல்வர்…!!
ஹரியானா மாநிலத்தில் புறா திருடிய கூறப்பட்ட சிறுவனின் இறப்பு தற்கொலை தான் என முதல்வர் கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலம் சோன்பட் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் (15) என்ற தலித் சிறுவன் மீது மற்றொரு வகுப்பைச் சேர்ந்தவர்களின் வீட்டுக்குள் புகுந்து புறா திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக காவல் துறையினர் அச்சிறுவனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் அச்சிறுவன் தனது வீட்டருகே தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடைத்தான்.
காவல் துறையினர் சிறுவனை அடித்துக் கொன்றுவிட்டதாக சிறுவனின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அச்சிறுவன் தற்கொலை செய்துகொண்டதாக முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, பணப்பிரச்சினை காரணமாக இது நிகழ்ந்துள்ளது. காடியா லோஹர் மற்றும் தானிக் குடும்பத்திடையே ரூ.6,000 மற்றும் புறா தொடர்பான பிரச்சினை இருந்துள்ளது.
இப்பிரச்சினை காவல் நிலையத்துக்குச் சென்ற போது, இருதரப்பினரும் பணத்தை சமமாக பங்கிட்டுக் கொள்வது எனக் கூறி சுமுகமாக பேசி முடித்துக் கொண்டனர். ஒரு தரப்பினர் பணம் கொடுத்துவிட்ட நிலையில் மற்றொரு குடும்பம் தரவில்லை. சிறுவனை காவலர்கள் அழைத்து விசாரிக்கவில்லை, அச்சிறுவனே காவல் நிலையம் சென்றுள்ளான்.
காவல் நிலையத்தில் வைத்து பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது. வியாழக்கிழமை இரவு அச்சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான். அச்சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும்.
சிறிய தனிப்பட்ட விடயங்களுக்கு சாதிச்சாயம் பூசுவது தவறான ஒன்று. எதிர்க்கட்சிகள் தேவையின்றி பிரச்சனையை பெரிதாக்குகின்றனர் என்று கூறியுள்ளார்.
Average Rating