வீட்டுக்குள் நுழைந்தது கட்டுவிரியன் பாம்பு கடித்து 3 குழந்தைகள் பலி
வீட்டுக்குள் நுழைந்த விஷப் பாம்பு, தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகளை கடித்தது. இதில் 3 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தன. மதுராந்தகம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி கோட்டக்கரையைச் சேர்ந்தவர் பூபாலன். விவசாயி. இவரது மனைவி யசோதா. இவர்களுக்கு ரெஜினா (25) என்ற மகளும், ராம்கி (10) என்ற மகனும் உள்ளனர். ரெஜினாவை செங்கல்பட்டு அருகே உள்ள வள்ளிபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு திரும ணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு நந்தினி (5), நவீன் (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரெஜினா குழந்தைகளுடன் கோட்டக்கரையில் உள்ள தாய் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். ராம்கி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ராம்கி, நவீன், நந்தினி ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் கட்டுவிரியன் பாம்பு அவர்களது வீட்டுக்குள் நுழைந்தது. தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் பக்கமாக அந்த பாம்பு ஊர்ந்து வந்தது.
தூக்கத்தில் இருந்த நந்தினி புரண்டு படுத்தபோது அவரது கால் பாம்பின் மீது பட்டது.
உடனே சீறிய அந்தக் கட்டுவிரியன் பாம்பு நந்தினியின் காலை கொத்தியது. குழந்தை அலறி எழுந்தது. அதற்குள் மற்ற இரு குழந்தைகளையும் கடித்துவிட்டது பாம்பு.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். ஆட்களின் அரவம் கேட்டதும் சரசரவென அந்த கட்டுவிரியன், வீட்டுக்குள் இருந்து வேகமாக வெளியேறி புதருக்குள் மறைந்து விட்டது. பதறிப்போன பெரியவர்கள், குழந்தைகள் படுத்த இடத்தை பார்த்தனர்.
அதற்குள் கொடிய விஷம் ஏறியதால் நந்தினி துடிதுடித்து இறந்தாள். மற்ற இரு குழந்தைகளான ராம்கி, நவீன் ஆகியோரின் உடலில் விஷம் ஏறிக்கொண்டு இருந்தது. உடனே அவர்களை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். 3 குழந்தைகளையும் பறிகொடுத்த அந்த பெற்றோர் கதறித் துடித்தது அனைவரையும் கண் கலங்கச் செய்தது.
இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் இறந்த இச்சம்பவத்தால், அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.