வேலூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை…!!
வேலூர் அடுத்த பெருமுகையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசராக பிரபாகரன் சேல்ஸ்மேனாக சுரேஷ் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றனர். அந்த பகுதியில் அடிக்கடி திருட்டு நடப்பதால் போலீசார் இரவு ரோந்து செல்வது வழக்கம்.
நேற்று இரவு போலீசார் அந்த வழியாக ரோந்து சென்றனர். இரவு 12 மணியளவில் அங்குள்ள நோட்டில் போலீசார் கையெழுத்திட்டு சென்றனர். பின்னர் மறுபடியும் அதிகாலை 3 மணியளவில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கடையின் சூப்பர்வைசர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். போலீசாரும் சூப்பர்வைசரும் கடையில் சென்று பார்த்தனர். அங்கு மேஜை டிராயரில் வைத்திருந்த 1 லட்சத்து 52 ஆயிரத்து 732 ரூபாயை கொள்ளை கும்பல் திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் உயர்ரக வகையான 143 மதுபாட்டில்களை எடுத்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். மொத்தம் திருடு போன ரொக்க பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
போலீசார் ரோந்து வரும் நேரத்தை கணக்கிட்டு திருட்டு கும்பல் இந்த கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். இதுகுறித்து சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் அடிக்கடி டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
Average Rating