குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆண்மைத் தன்மை நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம்…!!
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் ஆண்மைத் தன்மையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் நடத்தி வரும் அறக்கட்டளை ஒன்றில் படித்த சிறுவனுக்கு, அந்த வெளிநாட்டவர் பாலியல் தொந்தரவுகள் செய்துள்ளார்.
பின்னர் அவர் இங்கிலாந்துக்கு சென்ற நிலையில், பாலியல் தொந்தரவு குறித்து தன்னார்வ அமைப்பு பொலிசில் புகார் அளித்துள்ளது.
இதையடுத்து நடந்த விசாரணையின் முடிவில், கீழமை நீதிமன்றம், வெளிநாட்டவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவை எதிர்த்து அந்த இங்கிலாந்து நாட்டுக்காரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு எதிரான வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது.
இந்த வழக்கில் தொடர்புடையவர் மீது தமிழகத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக ஏதுவாக, “தேடப்படும் குற்றவாளியாக’ அறிவித்து சர்வதேச பொலிஸார் வெளியிட்ட நோட்டீஸுக்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆண்டுக்கு ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மைத் தன்மையை நீக்குதல் போன்ற நடைமுறை ரஷ்யா, போலந்து, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும், அமெரிக்காவின் சில மாகாணங்களிலும் நடைமுறையில் உள்ளது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன:
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கூடுதல் தன்டணையாக ஆண்மைத் தன்மை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
மேலும், பள்ளிகளில் உயர்நிலை வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கட்டாயமாக பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Average Rating