மூன்று பாட்டில் ஒயினைக் குடித்துவிட்டு மூன்று நாட்கள் ஹேங்ஓவரில் திண்டாடிய பூனை…!!
ஜெர்மனி நாட்டின் வுர்செலின் நகரைச் சேர்ந்த பூனையொன்று நடைப்பயிற்சியின்போது வழிதவறி பக்கத்து வீட்டுக்காரரின் நிலவறைக்குள் ஏழு வாரங்கள் சிக்கித் தவித்தது.
வெளியே சென்ற பூனை வீடு திரும்பாததால் வருத்தமடைந்த அதன் உரிமையாளர் முழுவீச்சில் அதைத் தேடத் தொடங்கினார். அலைந்து திரிந்து தேடியும் செல்லப்பூனை அல்ஜோஷா கண்ணுக்கு தென்படாததால், அதன் புகைப்படத்தோடு நூற்றைம்பது போஸ்டர்களை அச்சிட்டு வீட்டின் அருகிலுள்ள பகுதிகளில் ஒட்டிவைத்தார்.
இந்நிலையில், உண்ண உணவின்றி நிலவறைக்குள் மாட்டிக்கொண்டு தவித்த அல்ஜோஷா அங்கு வைக்கப்பட்டிருந்த மூன்று ஒயின் பாட்டில்களைக் குடித்து காலி செய்துள்ளது. சுமார் மூவாயிரம் மதிப்புள்ள ஒயின்களைக் குடித்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சில தினங்களுக்கு முன் அல்ஜோஷாவைக் கண்டெடுத்தார் அதன் உரிமையாளர் கிளவுடியா.
உடனடியாக, அல்ஜோஷாவை பிராணிகள் மருத்துவரிடம் கொண்டுசென்று பார்த்ததில், ஒயினை அதிகமாகப் பருகியதால், பூனை இப்படி பாதிப்புக்குள்ளானதாக தெரிவித்தார். மூன்று நாட்கள் படுக்கையிலேயே ஹேங்ஓவரால் தவித்திருந்த அல்ஜோஷா தற்போது இயல்பு நிலைக்கு வந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான், இது அல்ஜோஷாவுக்கும் பொருந்தும்.
Average Rating