விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கொல்ல இலங்கை ராணுவம் திட்டம்; பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் குண்டுகளை வாங்கி குவிக்கிறது
விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்களை கொலை செய்ய இலங்கை ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பதுங்கு குழிகளை ஊடுருவி தாக்கி அழிக்கும் குண்டுகளை வாங்கி குவிக்கிறது.இலங்கையில் அனுராதபுரம் விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புகளின் விமானங்களும், தற்கொலை படையினரும் கடுமையான தாக்குதல் நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த ராணுவம், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் தங்கி இருந்த பதுங்கு குழி மீது குண்டு வீசி அவரை கொன்றது. தற்போது, அதே பாணியில் இதர தலைவர்களையும் கொலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. புலிகளின் குறிப்பிட்ட பதுங்கு குழிகளை விமானம் மூலமாக குண்டு வீசி அழிக்க, அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இதற்காக பதுங்கு குழிக்குள் ஊடுருவி சென்று தாக்கும் குண்டுகளை இலங்கை அரசு கொள்முதல் செய்துள்ளது. அத்தகைய குண்டுகள், இன்னும் 10 நாட்களுக்குள் இலங்கைக்கு வந்து சேருகின்றன. இதற்கிடையே விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 53-வது பிறந்தநாள் அடுத்த வாரம் வருகிறது. அப்போது அவர் விடுதலைப்புலிகளின் அடுத்த இலக்கு குறித்து உரையாற்றுவார். எனவே, வரும் நாட்களில் இலங்கையில் உக்கிரமான சண்டை நடைபெறும் என்று தெரிகிறது. இதற்கிடையே, இலங்கையில் பல்வேறு இடங்களில் நடந்த சண்டையில் 9 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். வவுனியாவின் வடக்கு பகுதியில் உள்ள கள்ளிகுளம் என்ற இடத்தில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 5 புலிகள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பதுங்கு குழிகளையும் ராணுவம் அழித்தது. இந்த தகவலை ராணுவம் நேற்று தெரிவித்தது.
பெண் விடுதலைப்புலி
யாழ்ப்பாணத்தில் கிலாலி என்ற இடத்தில் நடந்த மோதலில் ஒரு விடுதலைப்புலி பலியானார். பெரியாத்தி குளம் என்ற இடத்தில் உள்ள புலிகளின் முகாமில் ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இது தவிர மன்னார் பகுதியில் உள்ள பரப்பகடல் என்ற இடத்தில், விடுதலைப்புலிகள் பகுதியில் இருந்து ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஒருவரை ராணுவம் சுட்டு கொன்றது.
இந்த நிலையில், கம்பிலிவேவா என்ற இடத்தில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்க அமைப்பினரிடம் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த ஒரு பெண்ணின் உடலை ராணுவம் ஒப்படைத்தது. மேலும் நவாலி என்ற இடத்தை சேர்ந்த ஒருவரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.