பாகிஸ்தானில் மத மோதலில் பலி 91; காயம் 150: 4 நாட்களாக சண்டை நீடிக்கிறது
பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த சன்னி, ஷியா பிரிவினருக்கு இடையே கடந்த 4 நாட்களாக மோதல் நடந்து வருகிறது. இதில் 91 பேர் பலியானார்கள். 150 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானில் சன்னி முஸ்லிம்கள் தான் அதிக அளவில் உள்ளனர். ஷியா முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் எண்ணிக்கை 20 சதவீதமே ஆகும். இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது வழக்கம். ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள பழங்குடி இன மக்கள் வசிக்கும் குர்ரும் என்ற பகுதியில் உள்ளது பரசினார் என்ற நகரம். இந்த நகரில் ஷியா முஸ்லிம்கள் பெரும் அளவில் வசிக்கிறார்கள். இதனால் இது குட்டி ஈரான் என்று அழைக்கப்படுகிறது. (ஈரானில் ஷியா முஸ்லிம்கள் தான் பெரும் எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.)
மசூதி மீது தாக்குதல்
இந்த நகரில் கடந்த வியாழக்கிழமை ஒருவர் சன்னி மசூதி மீது தாக்குதல் நடத்தினார். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து சன்னி முஸ்லிம்கள் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த 4 நாட்களாக சண்டை நடந்து வருகிறது. இருதரப்பினரும் ராக்கெட்டுகள், மோர்ட்டார் ரக குண்டுகள் ஆகியவற்றை வீசி தாக்கிக்கொண்டனர். வீடுகள், மசூதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் மொத்தம் 91 பேர் பலியானார்கள். 150 பேர் காயம் அடைந்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 46 பேர் பலியானார்கள்.
ஊரடங்கு உத்தரவு
பரசினார் நகரில் நடந்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. .அங்கு ராணுவமும் நிறுத்தப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் அங்கு மோதல் நீடிக்கிறது. இந்த மோதல் காரணமாக பல மசூதிகள், வீடுகள் சேதம் அடைந்தன.
கடந்த ஏப்ரல் மாதம் இதே நகரில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 80 பேர் பலியானார்கள்.