தன்னைக் குறித்து இணையத்தில் வந்த செய்தியை மறுக்கிறார், வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பரந்தாமன்..! (இதுஎப்படி இருக்கு?)
வவுனியா வடக்குப் பிரதேச செயலாளராகிய நான் தங்களிற்கு அறியத்தருவது தங்கள் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக பிரதேச செயலகம் பற்றியும், ஊழியர்களைப் பற்றியும் செய்திகள் பிரசுரித்தது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறித்த செய்தியை வெளியிட முதல் அதில் உள்ள உண்மை நிலையை அறிந்த பின்னர் தாங்கள் பிரசுரிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
இப்பிரதேசம் யுத்தசூனியப் பிரதேசமாக இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் எம்மால் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கையின் போது மக்களின் காணிப் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினை என்பன இருப்பதை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காண நாம் கொண்ட முயற்சிகளைத் தங்கள் இணையத்தளம் நிறைகளைக் காணாது குறைகளைக் காணும் முயற்சியில் ஈடுபடுவது எமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகின்றது.
புளியங்குளம் கடைத்தொகுதி தொடர்பான செய்தி தொடர்பாக வர்த்தக சங்கத்தினரிடம் தொடர்பு கொண்டால் அதன் உண்மை நிலையை அறியலாம் என அறியத் தருகிறேன்.
பரசங்குளம் பகுதியில் வயல்காணி அற்ற மக்களிற்கு வயல்காணி வழங்குவதை எமது செயலகமே மேற்கொண்டு வருகின்றது. குறித்த காணி தொடர்பாக காணி ஆணையாளரின் அனுமதிக்காக மாகாண காணி ஆணையாளர் ஊடக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த அனுமதி வரும்வரை குறித்த வயற்காணி தொடர்பாக எந்த வித கருத்தும் வழங்க முடியாது. ஊகங்கள் அடிப்படையில் செய்தி வழங்காமல் உண்மை நிலையை அறிந்து அதன் அடிப்படையில் வழங்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
Average Rating