சிவகிரி அருகே மலையேறி போராட்டம்: 50 பெண்கள் உள்பட 150 பேர் மீது வழக்கு..!!
நெல்லை மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தில் முறிய பாஞ்சான் கால்வாயை திறக்க வலியுறுத்தி தென்மலை, அருகன்குளம், செந்தட்டியாபுரம்புதூர், மேலூர் துரைச்சாமியாபுரம், காரிசாத்தான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊரை காலி செய்து தென்மலைக்கு கிழக்கே இந்திரா காலணி அருகில் உள்ள கீழ்மலைக்கு சென்று அங்கு சமைத்து உண்டு, போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு தென்மலை ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றியக் கவுன்சிலர் ராம்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் தென்காசி கோட்டாட்சித்தலைவர் வெங்கடேசன் தலைமையில் டி.எஸ்.பி. வானமாமலை, தாசில்தார் மாரிமுத்து, வருவாய் ஆய்வாளர் ரத்தினபிரபா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் (சிவகிரி), சுடலைமணி (வாசுதேவநல்லூர்), ஐயப்பன் (புளியங்குடி) உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
முறிய பாஞ்சான் வாய்க்கால் பகுதிக்கு சென்று நேரடி ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக ஆர்.டி.ஓ. வெங்கடேசன், போராட்டக்காரர்களிடம் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது மக்களுக்கு ஊறு விளைவித்தது போன்ற காரணங்களுக்காக போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாயத்து தலைவர் ஜோதிமுருகன், அ.தி.மு.க. செயலாளர் வீரபாண்டியன், ஒன்றியக் கவுன்சிலர் ராம்குமார், சமுதாயத்தலைவர்கள் மற்றும் 50 பெண்கள் உள்ளிட்ட 150பேர் மீது சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating