பவன் படுகொலை தொடர்பில் புளொட் விடுத்துள்ள அறிக்கை
கடந்த 12ம் திகதி இரவு வவுனியாவில் புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் செட்டிகுளம் பிரதேசத்தில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட புளொட்டின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இரத்தினம் சிறீகாந்தராஜா (பவன்) அவர்களின் பூதவுடல் இருநாட்கள் வவுனியா சின்னப்புதுக்குளத்திலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்றுகாலை 9மணியளவில் வவுனியா மினிபஸ் சங்க தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நண்பகல் 12மணியளவில் கோவில்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வுகளில்; புளொட் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இவரது படுகொலை தொடர்பில் புளொட் விடுத்துள்ள அறிக்கையில், இனத்தின் விடுதலைக்காக கடந்த 20ஆண்டு காலமாக தன்னை அர்ப்பணித்து துணிச்சலுடன் செயற்பட்ட மனித நேயம் மிக்க மனிதராக வாழ்ந்த தோழர் பவன் படுகொலை செய்யப்படும்வரை மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டு வந்தார். மக்களின் மீள்குடியேற்ற திட்டப் பிரிவில் முக்கிய பங்காற்றிய இவர், வவுனியா தனியார் போக்குவரத்து சங்கம் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் போன்றவற்றின் போசகராகவும் திறம்பட செயலாற்றினார்.
தோழர் பவன் போன்ற மக்களின் விடுதலையை நேசிப்போரை படுகொலை செய்வதன்மூலம் புலிகள் ஒருபோதும் தங்கள் இலட்சியத்தை அடைந்துவிட முடியாது. ஏகப் பிரதிநிதித்துவத்தை நிலைப்படுத்த படுகொலைகள் ஒருபோதும் வழியாக அமையாது.
மாற்றுக் கருத்துக் கொண்டோரை கொலை செய்வதன்மூலம் அழிக்க முனைவது ஈற்றில் மனிதன் இல்லாத மண்ணையே விட்டுச் செல்லும் என்பதை புலிகள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
தோழர் பவனின் இழப்பால் துயருறும் குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரில் நாமும் பங்கு கொண்டு எமது கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.