சென்னை பஸ்சில் குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்டதால் கண்டக்டர் மண்டை உடைப்பு: பயணி தப்பி ஓட்டம்…!!
நேற்று இரவு சிதம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. பஸ்சில் சிதம்பரத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் நடத்துனராக இருந்தார்.
பஸ் தாம்பரம் அடுத்து உள்ள பெருங்களத்தூர் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது தாம்பரத்தை சேர்ந்த பாலமுருகன் (35) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோயம்பேடு செல்வதற்காக பஸ்சில் ஏறினார்.
பஸ் புறப்பட்டதும் நடத்துனர் மாயகிருஷ்ணன், பாலமுருகனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தனக்கும், மனைவிக்கும் மட்டும் டிக்கெட் எடுத்தார். குழந்தைக்கு 2½ வயதுதான் ஆகிறது. அதனால் டிக்கெட் எடுக்க முடியாது என கூறினார்.
இதனால் மாயகிருஷ்ணனுக்கும், பாலமுருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் பஸ்சில் இருந்த இரும்பு ராடை எடுத்து மாயகிருஷ்ணன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மாயகிருஷ்ணன் மண்டை உடைந்து ரத்தம் வந்தது. அவர் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு டிரைவர் பஸ்சை நிறுத்தினார். உடனே பாலமுருகன் பஸ்சில் இருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் பஸ் கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு வந்தது. மாயகிருஷ்ணன் சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாலமுருகனின் மனைவியும், குழந்தைகளும் நெற்குன்றத்தில் உள்ள அவரின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலமுருகனை தேடி வருகிறார்.
Average Rating