வாணியம்பாடி அருகே வாலிபர் அடித்துக் கொலை..!!
வாணியம்பாடி அருகே நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகம்மது (20). இவர் இன்று காலையில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 5 பேருடன் தமிழக–ஆந்திர எல்லையையொட்டி புல்லூர் கிராமம் நாச்சியம்மன் கோவில் அருகே உள்ள பாலாற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்றார்.
முகம்மது உள்பட நண்பர்கள் 6 பேரும் தடுப்பணையில் குளித்தனர். பின்னர் கரையில் ஏறி உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முகமதுவுக்கும் அவரது நண்பர்கள் 5 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஒருவரை ஒருவர் ஆபாசவார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து முகமதுவை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அப்போதும் ஆத்திரம் தீராமல் வெறிபிடித்து போல் இருந்த 5 பேரும் முகமதுவை கழுத்து நெறித்து அடித்துக் கொலை செய்தனர்.
முகம்மது இறந்து விட்டதை உறுதி செய்த 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் முகம்மதுவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அவரது நண்பர்கள் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating