இஸ்ரேல் டாங்கி படை பாலஸ்தீனத்துக்குள் புகுந்தது: லெபனானிலும் விமான தாக்குதல்
லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவத்தினர் சிலரை கொன்று விட்டு 2 பேரை கடத்தி சென்றனர். இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாக குண்டு வீசி தாக்கி வருகிறது. தலைநகரம் பெய்ரூட்டை குறி வைத்து தாக்கிய இஸ்ரேல் இப்போது தாக்குதலை பரவலாக்கி உள்ளது. சைதா என்ற இடத்தில் சமையல் கியாஸ் சேமிப்பு கூடத்தில் குண்டு வீசப்பட்டது. இதில் அந்த பகுதி தீப்பற்றி எரிகிறது.
லெபனான் துறைமுகத்தையும் குறி வைத்து விமானங்கள் சரமாரி குண்டுவீசி தாக்கின. இதில் துறைமுக சேமிப்பு கிடங்குகள் பலத்த சேதம் அடைந்தது. துறைமுக பிளாட்பாரங்கள் சின்னா பின்னமாக சிதறின.
இஸ்ரேல் எல்லையில் உள்ள லெபனான் கிராமங்களும் தப்பவில்லை. சில கிராமங்கள் முற்றிலும் தரை மட்டம் ஆயின. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பலியானார்கள். தாக்குதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 36 பேர் பலியானார்கள்.
இதேபோல பாலஸ்தீனத்திலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இன்று காசா பகுதியில் டாங்கி படை புகுந்தது. ஹமாஸ் இயக்கத்தில் அலுவலகங்களை நோக்கி டாங்கிகள் முன்னேறி வருகின்றன.