அம்பத்தூர் பகுதியில் அண்மையில் நடந்த கொலையில் தொடர்பு: 2 பேர் கைது
அம்பத்தூர் பகுதியில் அண்மையில் நடந்த கொலை ஒன்றில் தொடர்புடைய 2 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். ஏழு கிணறில் வசித்து வந்த பாலசுப்பிரமணி (வயது 35) என்பவர் அம்பத்தூர் ஸ்டேட் முகப்பேர் சாலையிலுள்ள தனக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 2ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் வைத்திருந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களும் களவாடப் பட்டிருந்தன. இது குறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இக்கொலையில் தொடர்புடைய வேலூரைச் சேர்ந்த அரிகேசவன் (வயது 28), திருபத்தூரைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் (எ) மகேஷ் (வயது 24) ஆகிய இரண்டு வாலிபர்களையும் நொளம்பூரில் நேற்று கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள திருட்டுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் குறிப்பிட்டனர்.