சிறுவனின் உடல் தானம்
மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, இறந்த தனது 6 வயது மகனின் உடலை தானம் செய்த முன்னாள் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரின் செயலுக்கு மருத்துவமனை டாக்டர்களும், தானம் பெற்று பயனடைந்தவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிதம்பரம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த செய்தி குறித்து கூறப்படுவதாவது: சிதம்பரம் மாரியப்பன் நகரில் வசிப்பவர் முரளி (வயது 35). இவர் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சிவக்குமாரி. இவர் அங்குள்ள காமராஜர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சரவணன் (வயது 13), சிவக்குமார் (வயது 6) என்ற 2 மகன்கள் உள்ளனர். சிவக்குமார் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் பகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சிவக்குமாருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சிறுவன் சிவக்குமார் பரிதாபமாக இறந்தான்.
இறந்தவுடன் சிறுவனின் தந்தை முரளி, சென்னையில் உள்ள சங்கரநேத்ராலயா மருத்துவ மனைக்கும், அப்பல்லோ மருத்துவ மனைக்கும் தனது மகனின் உடலை தானம் செய்வதாக தகவல் தெரிவித்தார்.
அதன்படி சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு 2 கண்களையும் எடுத்து சென்றனர். 2 கிட்னிகளில் ஒன்றை நெய்வேலியைச் சேர்ந்த ஒருவருக்கும், மற்றொரு கிட்னி சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் தானம் அளிக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த ஒரு சிறுவனுக்கு லிவர் பொருத்தப்பட்டது.
6 வயது நிரம்பிய தனது மகனின் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானம் செய்த சிறுவனின் பெற்றோர்களை சங்கரநேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவர் களும், உடல்உறுப்புகளை பெற்று பயடைந்தவர்களும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
மேலும் இறந்த சிறுவனின் உடல் சிதம்பரத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டது. அவன் படித்த பள்ளியின் ஆசிரியர்கள் உடல் தானம் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறி அஞ்சலி செலுத்தினர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.