போக்குவரத்து நெரிசலால் சாலையில் குழந்தை பெற்று கொண்ட டெல்லி பெண்கள்…!!
தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலால் சாலையில் 2 பெண்கள் குழந்தை பெற்று கொண்ட அவலம் நடந்துள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்த இந்திய-ஆப்பிரிக்க மாநாட்டின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று மாலை, தென் கிழக்கு டெல்லியில் அரசு பேருந்தில் பிரசவ வலியுடன் காத்திருந்த ரேகா (20) என்ற கர்ப்பிணியின் பனிக்குடம் உடைந்ததால், பேருந்து நடத்துனர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு பெண் பொலிசார் உதவிக்கு செல்வதற்குள், பேருந்தின் உள்ளேயே ரேகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவம் நல்லபடியாக முடிந்த நிலையில், பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரேகாவுக்கு தொப்புள் கொடி அறுக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு டெல்லியின் ‘கஜோரி சவுக்’ பகுதியில் போக்குவரத்தில் ஆட்டோவில் சிக்கிக் கொண்ட ரோஷினிக்கோ (28) என்ற கர்ப்பிணி பெண், பிரசவ வலியால் துடித்துள்ளார்.
இந்நிலையில், பிரசவ வலி தாங்க முடியாமல் தவித்த ரோஷினிக்கோவுக்கு ஆட்டோவில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு 35 தையல்கள் போடப்பட்டுள்ளது.
இந்த 2 சம்பவங்களும் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating