அரசு சம்பந்தப்பட்ட மதக் குழுவினரால் குழப்பமடைந்திருக்கும் கிழக்கு
உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் யதார்த்தத்தை முற்றாக விளங்கிக் கொண்டு அரசாங்கம் எதிர்காலத்தில் செயற்பட்டாலன்றி எதிர்காலம் எமக்கு நன்மை பூர்வமாகவும் சாதகமாகவும் அமையப் போவதில்லை. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக அமையும். கிழக்கு மாகாணத்தை வென்றெடுப்பதற்குச் சாதகமாக அமைந்த விடயங்கள் இரண்டு. ஒன்று கருணா குழுவினரின் புலிகள் எதிர்ப்பு மற்றையது முஸ்லிம் மக்களின் புலிகள் எதிர்ப்பு நிலைப்பாடு. இப்பொழுது கருணா குழுவினர் ஒருவரை ஒருவர் கொல்லும் நிலைமை உருவாகியுள்ளதுடன், கிழக்கில் அவர்களுடைய சட்ட விரோத செயற்பாடுகள் காரணமாக கிழக்கு மாகாண மக்களிடையே அவர்களுடைய அரசியல் கட்சியாகிய தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றியும் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் அரசாங்கம் பற்றியும் குழப்பமான நிலை உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு குழுவினர் கிழக்கில் பௌத்த மத உரிமையைப் பாதுகாப்பதாக கூறி செய்துவரும் காரியங்களாலும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பீதியும் குழப்பமும் எதிர்ப்பும் உருவாகியுள்ளது. தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் ஆதரவு இல்லாது கிழக்கு மாகாணத்தில் பெற்ற வெற்றியைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.
ஷ்ரீலங்கா பல்லினத் தன்மையும் பன்மதச் சார்பும் உடைய நாடு என்பதுபற்றியும் அனைத்து இனப்பிரிவினருக்கும் மதப் பிரிவினருக்கும் அரசு ஆதரவை வழங்கவேண்டும் என்பது பற்றியும் விளங்கி அதன் அடிப்படையில் செயற்பட முடியாத நிலைமை புலிகளின் அச்சுறுத்தலிலிருந்து நாட்டை பாதுகாக்க முடியாத நிலைமையையே ஏற்படுத்தும்.
ஷ்ரீலங்கா பிரச்சினை என்பது புலிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. நீண்ட காலமாக புலிகளின் பிரச்சினையிலேயே கவனம் செலுத்திக் கொண்டு மக்களின் ஏனைய முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தாதிருப்பதும் மறந்து விடுவதும், குறைவாக மதிப்பிடுவதும் அந்த ரீதியிலான செயற்பாடுகளும் கிழக்கில் வெற்றிகரமான நிர்வாகத்தை ஏற்படுத்த முடியாத நிலைமையையே உருவாக்கும்.
இவ்வாறு கிழக்கு மக்களுக்கு எதிரானதும் அரசாங்கத்துக்குச் சவால்களாக உள்ளதுமான மேற்படி பிரச்சினைகளை வெல்லும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவரது அரசின் மூன்றாவது வருட ஆட்சியில் செயற்படுவாரா என்பதைப் பொறுத்தே கிழக்கு மாகாணத்தின் எதிர்காலத்தைப் பெருமளவில் தீர்மானிக்க முடியும்.
லங்காதீப “வடக்கு தெற்கு”விமர்சனம்