அநுராதபுரம் விடுதி உரிமையாளர் கொலை: 27 சந்தேகநபர்கள் கைது…!!
அநுராதபுரம் இரவு விடுதியின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தை திட்டம் தீட்டிய இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அத்துடன், இராணுவத்திலிருந்து தப்பியோடிய இரோன் ரணசிங்க என்ற சந்தேகநபரும் இந்த கொலையுடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தங்காலை பகுதியில் இன்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் இரோன் ரணசிங்கவின் சகோதரன் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரம் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் அவரை அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Average Rating