யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் புதிய நடைமுறை..!!
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெற வருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதுவரை காலமும் இருந்து வந்த பாஸ் நடைமுறை தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டுள்ளதுடன் ஒரே நேரத்தில் ஒரு நோயாளியின் அருகில் இரு பார்வையாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளுக்கு பொது மக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்கான நேரங்கள் கீழ்வருமாறு அமையும்.
காலை 6 மணி முதல் 6.30 மணி வரையும் மதியம் நண்பகல் 12 மணி முதல் பி.ப. 1 மணி வரை மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை காலையில் நோயாளர்களுக்கு உணவு வழங்க மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளது.
வைத்தியசாலைக்குள் பிரவேசிக்கும் பொதுமக்கள் தமது தேவைக்குகென எடுத்துவரும் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், இளநீர்க் கோம்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை வைத்தியசாலை வளாகத்தில்விட்டுச் செல்லாது தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
வெற்றிலை, சிகிரெட், மதுபானம் உள்ளடங்கிய போதைப்பொருட்களை எடுத்து வருவது பாவிப்பது நோயாளர்களுக்கு வழங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும்.
சிறுவர்கள் முதியவர்கள் மிக இலகுவில் நோய்த்தொற்றுக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் இவர்கள் இயன்றவரை விடுதிகளில் பார்வையாளர்களாக வருவதை தவர்த்துக்கொள்ளவும்.
தீவிர சிகிச்சைப்பிரிவு , அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ,பிரசவ விடுதிகள் குழந்தை விடுதிகள் போன்றவற்றில் சிகிச்சை பெறுபவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பிற்குள் உள்ளதால் இயன்றவரை மேற்படி பகுதிக்கு பார்வையாளர்களாக வருவதை தவிர்த்துக்கொள்ளவும். என வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Average Rating