இங்கிலாந்தில்; இந்தியர்கள் கள்ளத்தனமாக குடியேறுவது எப்படி?: பாராளுமன்ற குழு விசாரணை செய்கிறது
இந்தியர்கள் குறிப்பாக பஞ்சாபிகள் கள்ளத்தனமாக இங்கிலாந்தில் அதிகஅளவில் குடியேறுவது எப்படி என்பது பற்றி இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றக்குழு விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபில் இருந்து திருட்டுத்தனமாக இங்கிலாந்துக்கு குடியேறுவது பற்றி தயாரிக்கப்பட்ட சினிமா, “ஷோர்ஸ் பார் அவே” படத்தின் வெளியீட்டு விழா லண்டனில் நடந்தது. சவ்யாச்சி ஜெயின் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த பட விழாவில் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் மந்திரி கெய்த் வாஸ் கலந்து கொண்டார். அவர் இப்போது, உள்நாட்டு விவகாரத்துக்கான பாராளுமன்ற தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார். அவர் இந்த விழாவில் பேசியதாவது:- கணிசமான இந்தியர்கள் குறிப்பாக பஞ்சாபிகள் எப்படி கள்ளத்தனமாக இங்கிலாந்தில் குடியேறுகிறார்கள் என்பது பற்றி பாராளுமன்ற தேர்வுக்குழு விசாரணை நடத்தும். அவர்கள் திருட்டுத்தனமாக குடியேற உதவும் தரகர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குடியேற்ற மந்திரி லியாம் பைர்னே அடுத்த மாதம் இந்தியா செல்ல இருக்கிறார். அவருடன் உயர்மட்ட குழு ஒன்றும் இந்தியா செல்கிறது. மந்திரி இந்திய தலைவர்களை சந்தித்து பேசும்போது, இதுபற்றியும் விவாதிக்கப்படும் இவ்வாறு கெய்த் வாஸ் கூறினார்.
பணமோசடி புகார்
இந்த விழாவில் பஞ்சாப் மாநில எம்.எல்.ஏ. ஜஸ்சி கங்குரா கலந்து கொண்டார். அவர் கூறுகையில், திருட்டுத்தனமாக குடியேறாதீர்கள் என்று பெருந்திரளான மக்களிடம் எடுத்துக்கூறுவது சாத்தியமற்றது. இது எங்களுக்கும் பெரிய பிரச்சினையாகத்தான் இருக்கிறது. சராசரியாக தினம் 15 பேர் என்னிடம் வந்து வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகள் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டனர் என்று புகார் கூறுகிறார்கள்.
இப்படி திருட்டுத்தனமாக செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் சட்டப்பூர்வமான குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பதால், எப்படியாவது சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றுவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் இவ்வாறு எம்.எல்.ஏ ஜஸ்சி கங்குரா கூறினார்.
கடந்த ஆண்டு மட்டும் 2,500 இந்தியர்கள் ஆஸ்திரேலியா வழியாக இங்கிலாந்தில் குடியேறி உள்ளனர்.