புயலால் பாதிக்கப்பட்ட வங்காள தேசத்துக்கு சர்வதேச நாடுகள் ரூ.100 கோடி உதவி
வங்காள தேசத்தை தாக்கிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்கு உலக நாடுகள் முன்வந்து உள்ளன. அந்த நாடுகள் 100 கோடி ரூபாய்க்கு உதவி அளிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்து உள்ளன. வங்கக்கடலில் உருவான சிடர் என்ற புயல் ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை பயமுறுத்தி விட்டு, வங்காள தேசத்தில் புகுந்து பேரழிவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று செம்பிறை அமைப்பு (செஞ்சிலுவை அமைப்பு) தெரிவித்து உள்ளது. அதிகாரப்பூர்வமான சாவு எண்ணிக்கை 2400 ஆகும். புயல் காரணமாக லட்சக்கணக்கானவர்கள் வீடு, வாசல்களை இழந்து தவிக்கிறார்கள். இந்த புயல் கடந்த வியாழக்கிழமை இரவு கரையை கடந்தது. இதைத் தொடர்ந்து நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. புயல் தாக்கியதும் அமெரிக்கா உடனடியாக 40 லட்சம் ரூபாய் மதிப்புக்கு நிவாரண பொருட்களையும், 5 பேர் கொண்ட குழுவையும் அனுப்பி வைத்தது. அதோடு 2 கடற்படை கப்பல்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது. அவை இன்னும் 7 நாட்களுக்குள் டாக்கா வந்து அடையும். ஒவ்வொரு கப்பலிலும் 20 ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. அவை மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும். அதோடு உதவி பொருட்களையும் அனுப்பி வைத்து உள்ளது. 8 கோடி ரூபாய் அளவுக்கு நிவாரண பொருட்களை அமெரிக்கா அனுப்ப இருக்கிறது
ரூ.100 கோடி உதவி
சர்வதேச நாடுகள் வங்காள தேசத்துக்கு 100 கோடி ரூபாய் மதிப்புக்கு உதவி அளிப்பதாக உறுதி அளித்து உள்ளன. ஐ.நா. மற்றும் உதவி வழங்கும் அமைப்புகள் வங்காளதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. உணவு, போர்வை, டெண்டு அமைப்பதற்கான துணிகள், மருந்து ஆகியவற்றையும் அளிப்பதாக அவை உறுதி அளித்து உள்ளன.
இங்கிலாந்து உதவி
அவசர கால தேவைக்கு உடனடியாக உதவி அளிக்க போதுமான நிதி வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஸ்டெபான் புரோவின் தெரிவித்தார்.
இங்கிலாந்து நாடு 20 கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவி அளிப்பதாக உறுதி அளித்தது. ஐ.நா. அமைப்புகள் 56 கோடி ரூபாய் அளிப்பதாக உறுதி அளித்து உள்ளன.
ஜப்பான் நாடு உடனடியாக டெண்டுகள், போர்வைகள், உடைகள் ஆகியவற்றை வழங்க முன்வந்து உள்ளது.