தாய்-மகள் தற்கொலை: தூக்கு கயிறு அறுந்ததால் தப்பிய இன்னொரு மகள்
ராமநாதபுரம் அருகே இரு மகள்களுடன் தாய் தற்கொலை செய்தபோது தூக்கு கயிறு அறுந்து விழுந்து ஒரு மகள் மட்டும் தப்பினார். ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் நேதாஜி நகரைச் சேர்ந்த சேதுராஜா-சேதுலட்சுமி தம்பதியின் மகள்கள் சங்கீத பிரியா (15) சரண்யா (14). கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இவர்கள் இருவரும் பிரிந்து தனிதனியாக வாழ்ந்து வருகின்றனர். சேது லட்சுமியுடன் அவரது இரு மகள்களும் வசித்து வருகின்றனர். சத்துணவு ஆயாவாக வேலை செய்து வந்தார் சேதுலட்சுமி. ஏழு மாதத்திற்கு முன் அவருக்கு சத்துணவு அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பார்வதி என்பவர் இம்மையத்தின் சத்துணவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். வேலை போன நிலையில் மனமுடைந்த சேது லட்சுமி தனது இரு மகள்களுடன் விஷம் அருந்தி, தூக்கு கயிறு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். அதில் சங்கீத பிரியாவின் கழுத்தில் இறுக்கப்பட்ட கயிறு மட்டும் அறுந்து விழுந்ததில் அவர் உயிர் பிழைத்தார். தாய் சேதுலட்சுமியும், தங்கை சரண்யாவும் பரிதாபமாக இறந்து விட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதுலட்சுமி, சரண்யா ஆகியோரின் பிரேதங்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.