வடமாகாணத்தில் நிரந்தர வைத்தியர் பற்றாக்குறை..!!
வடமாகாணத்தில் உள்ள 102 வைத்தியசாலைகளில் 32 வைத்தியசாலைகள் நிரந்தர வைத்தியர்கள் இன்றி இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்திறப்பு விழாவில்கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘வடக்கு மாகாணத்தில் தற்போது யாழ். போதான வைத்தியசாலை தவிர்ந்த 102 வைத்தியசாலைகள் உள்ளன. இதில் 32 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் எவரும் இல்லாத நிலை காணப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக வடமாகாண சபை இந்த வைத்தியசாலைகளை மூடவில்லை.
ஓய்வு பெற்ற வைத்தியர்கள் 16 பேர் வரையில் ஒப்பந்த அடிப்படையிலும், பல்கலைக்கழக மருத்துவ படிப்பை முடித்து விட்டு உள்ளக பயிற்சிக்காக இருக்கும் மாணவர்களை கொண்டும் பல வைத்தியசாலைகளை இயக்கி வருகின்றோம். இருந்தும் பல வைத்தியசாலைகளில் பிரச்சனைகள் காணப்படுகின்றன.
வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்களை டிசெம்பர் மாதமளவில் தருவதாக மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன எமக்கு உறுதியளித்துள்ளார். வடமாகாண சபை கடந்த 5 வருடங்களில் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. மாங்குளத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை ஒன்றினையும் கிளிநொச்சியில் நவீன வசதியுடன் கூடிய முதியோர் இல்லம் ஒன்றினையும் அமைக்கவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என அவர் மேலும் கூறினார்.
Average Rating