இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்-சுனாமி எச்சரிக்கை
இந்தோனேஷியாவை இன்று மிக சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் இது 7. 2 என்ற அளவுக்குப் பதிவானது. இதில் குறைந்தபட்சம் 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த பூகம்பத்தையடுத்து ஜாவா, சுமத்ரா, பாலி, கோகஸ் தீவுகள், ஆஸ்திரேலியாவின் கிருஸ்துமஸ் தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு தெற்கே கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி பகல் 1.49 மணிக்கு இந்த பூகம்பம் தாக்கியது. சுமார் 2 நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கத்தில் தலைநகர் ஜகார்தா உள்பட பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
ஜாவாவில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து பலர் பலியாகியுள்ளனர். இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்த பூகம்பம் காரணமாக சிறிய அளவில் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசிய கடற்பகுதியில் 9.2 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பயங்கர சுனாமி அலைத் தாக்குதலால் தமிழகம் உள்பட ஆசிய பகுதிகளி கடும் பாதிப்பை சந்தித்தது நினைவிருக்கலாம்.