மோசடி கும்பலைச் சேர்ந்த இளம் பெண் மர்மச்சாவு..!
மோசடி கும்பலைச் சேர்ந்த இளம் பெண் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த ஜானகிராமன். பட்டதாரியான இவருடைய தம்பி பெயர் இளையராஜா. இவர் இன்ஜினீயருக்கு படித்தவர். இவர்கள் இருவரும் தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், சென்னை ஆகிய இடங்களில் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக போலி பணிநியமன உத்தரவுகளின் ஜெராக்ஸ் பிரதிகளை கொடுத்து 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த அகிலா என்ற அகிலாண்டேஸ்வரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த 17ந் தேதி அகிலாண்டேஸ்வரியின் தந்தை வல்லத்தரசு என்பவர் தஞ்சாவூருக்கு வந்து மகளை சந்தித்துப் பேசினார். பிறகு தஞ்சாவூரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். அவர் ஊருக்கு திரும்பிச் சென்று விட்டார்.
அகிலாண்டேஸ்வரி வெளியே சென்றவர் மாலை 6 மணியளவில் மீண்டும் அறைக்கு திரும்பினார். அப்போது அவர் சோர்ந்து காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சற்று நேரம் கழித்து அகிலாண்டேஸ்வரி தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து தஞ்சை தெற்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், அகிலாண்டேஸ்வரி இறந்து போனது குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் வந்தபின்னரே சடலம் இறக்கப்பட்டு பிரேத பரி சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார்.
அகிலாண்டேஸ் வரியின் பெற்றோர் தஞ்சாவூருக்கு வந்ததையடுத்து, அகிலாண்டேஸ்வரி யின் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அகிலாண்டேஸ்வரியின் இறப்பு குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டது.