சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மார்வன் அத்தப்பத்து இளைப்பாறினார்
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பான, நேர்த்தியான துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து தான் இலங்கை சார்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து இளைப்பாறுவதாக அறிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் மைதானத்தில் இடம்பெற்று முடிந்துள்ள ஆஸ்திரேலியாவிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இறுதியின்போதே இவர் இந்த அறிவிப்பினை மேற்கொண்டிருக்கிறார். தனது கிரிக்கெட் வாழ்வில் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அத்தப்பத்து, ஆறு இரட்டைச்சதங்கள், 16 சதங்கள் மற்றும் 17 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக சுமார் 5502 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறார். அதேபோல சுமார் 268 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 11 சதங்கள், 59 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக சுமார் 8529 ஓட்டங்களை விளாசியிருக்கிறார். இதன் பின்னர் இவர் சர்ச்சைக்குரிய இந்தியன் கிரிக்கெட் லீக்கினால் நடத்தப்படவுள்ள போட்டிகளில் பங்கேற்கவிருப்பதாக ஊகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும், இதனை அத்தப்பத்து இதுவரை மறுக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.