மகன் இறந்தது தெரியாமல் 10 நாளாக தேடிய பெற்றோர்: போலீசார் மீது குற்றச்சாட்டு…!!
தண்டையார்பேட்டை, நேதாஜிநகர் 1–வது தெருவில் வசித்து வருபவர் வேல்முருகன். இவரது மகன் அரிகிருஷ்ணன் என்ற மணிகண்ட பிரபு (வயது16). கொருக்குப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
கடந்த 25–ந்தேதி பள்ளிக்கு சென்ற அரிகிருஷ்ணன். பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தியும் எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இதனை கண்டித்து மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அரிகிருஷ்ணனின் நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த 25–ந் தேதியே அரிகிருஷ்ணன் நண்பர்களுடன் சேர்ந்து அத்திப்பட்டில் உள்ள மற்றொரு நண்பரை பார்கக் சென்றதும் அப்போது ரெயிலில் அடிபட்டு இறந்து இருப்பதும் தெரிய வந்தது.
கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் அரிகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இருந்தனர். மாணவனின் உடலை பெற்றோர் அடையாளம் காட்டினர்.
மகன் இறந்தது தெரியாமல் கடந்த 10 நாட்களாக அவனை பெற்றோர் தேடி வந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
அரிகிருஷ்ணனுடன் சென்ற நண்பர்கள் ரெயில் மோதி இறந்ததாக கூறி உள்ளனர். ஆனால் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் முகத்தில் காயத்துடன் பிளாட்பாரத்தில் அரிகிருஷ்ணன் கிடந்ததாக வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இது போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அரிகிருஷ்ணனின் பெற்றோர் கூறும் போது, மகனை காண வில்லை என புகார் கொடுத்ததும் உடனடியாக போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை. அவனது சாவில் மர்மம் உள்ளது என்றனர்.
இது தொடர்பாக அரிகிருஷ்ணனின் நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating