திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருக்கையில் அமர்ந்த நிலையில் வாலிபர் பிணம்…!!
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் வேலூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் அமருவதற்காக இரும்பால் ஆன இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதில் பயணிகள் அமர்ந்திருந்தனர்.
நேற்று சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில் பையுடன் வந்தார். அவர் அங்குள்ள கடையில் தண்ணீர் வாங்கி குடித்து விட்டு பயணிகளுக்கான இருக்கையில் வந்து அமர்ந்தார்.
சிறிது நேரத்தில் இருக்கையில் லேசாக சாய்ந்துள்ளார். பின்னர் நீண்ட நேரமாக அவர் அப்படியே இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மற்ற பயணிகள் அவரை பார்த்தபோது அவர் இறந்திருந்தது தெரியவந்தது. அவர் திடீர் என்று இறந்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
உடனடியாக இதுபற்றி திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் ஒரு சாப்பாடு தட்டு இருந்தது. அதன் பின்பகுதியில் தமிழில் ஏ என்று எழுதப்பட்டிருந்தது. வேறு எதுவும் பையில் இல்லை.
அவர் யார், எந்த ஊர், எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருக்கையில் அமர்ந்த நிலையில் வாலிபர் பிணமாக இருந்ததை அறிந்த மற்ற பயணிகள், அதை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
Average Rating