காஞ்சிபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலி…!!
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம், மாதனம்பாளையம் தெரு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஞானவள்ளி (வயது 20). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி.கணிதம் படித்து வருகிறார்.
இந்த நிலையில் ஞானவள்ளிக்கு கடந்த 1-ந் தேதி திடீரென்று மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் அதிகம் ஆகவே அவர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த திருமணி இந்திராநகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் இருதயராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவி ( 31). இவர்களுக்கு 8 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தேவி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று மாலை மீண்டும் காய்ச்சல் ஏற்படவே அவர் அதே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Average Rating