இலங்கை, இந்தியர் உள்பட 43 பேரை ஈராக் ராணுவம் கைது செய்தது; அமெரிக்க வீரர்களும் கைது செய்யப்பட்டார்களா?
ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில் ஒரு இந்தியர் உள்பட 43 பேரை ஈராக் ராணுவம் கைது செய்தது. அமெரிக்க ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதை ராணுவ அதிகாரிகள் மறுத்து உள்ளனர். ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்துக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை சப்ளை செய்யும் பணியை அமெரிக்க ராணுவம் காண்டிராக்ட்டு விட்டு உள்ளது. இந்த காண்டிராக்டை அல்ம்கோ என்ற துபாய் நிறுவனம் எடுத்து உள்ளது. இந்த நிறுவனத்தில் பலநாடுகளை சேர்ந்த வர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் இந்தியர் ஒருவர் உள்பட 43 பேர் லாரிகளில் பாக்தாத் நகரில் சென்றபோது, இந்த லாரிகளில் பாதுகாப்புக்காக வந்த வெளிநாட்டு காவலர்கள் ஈராக்கியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஈராக்கிய பெண் ஒருத்தி காயம் அடைந்தார். இதை தொடர்ந்து இந்த வாகனங்களில் வந்தவர்கள் 43 பேரையும் ஈராக் ராணுவம் கைது செய்தது. அவர்களில் ஒருவர் இந்தியர் ஆவார். அவர் பெயர் என்ன?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மற்றும் 2 அமெரிக்க ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இதை ஈராக் ராணுவ அதிகாரிகள் மறுத்து உள்ளனர். அமெரிக்க வீரர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இலங்கையைச் சேர்ந்த 21 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த 2 பேரும், 9 நேபாளிகளும், 10 ஈராக்கியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈராக் ராணுவ தலைமையகத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.