ஈழத் தமிழ் மக்களை ஆழமாக நேசித்த அன்புத் தாய் மாரியம்மாள்…!!
ஈழ மக்களின் விடிவிற்காக காத்திருந்தவர் மாரியம்மாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
வைகோவின் தாயார் மாரியம்மாள் காலமானதைத் தொடர்ந்து அக்கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
ஈழத் தமிழ் மக்களின் அன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய அண்ணன் வை.கோபால்சாமி அவர்களின் அன்புத் தாயார் மாரியம்மாள் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம்.
கடந்த மூன்றரை தசாப்தங்களாக ஈழத் தமிழ் மக்கள் மேற்கொண்டுவந்த உரிமைப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பேரன்னை மாரியம்மாள் தன்னை ஈடுபடுத்தி அற்பணிப்புடன் உழைத்திருந்தார்.
எமது மக்களின் இலட்சியப் போராட்டப் பயணத்தில் தன்னை அற்பணிப்புடன் ஈடுபடுத்தியிருந்தார்.
ஈழத் தமிழ் மக்களின் விடிவுக்காக ஓய்வின்றி புயலாக உழைத்துவரும் வைகோ என்ற பெருமகனைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய தாயார் இன்று எம்மோடு இல்லை என்ற செய்தி எமது மக்களை தீராத்துயருக்குள் தள்ளியுள்ளது.
எமது மக்களையும், போராட்டத்தையும் ஆழமாக நேசித்து அந்த மக்களின் விடுதலையை தனது இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த அன்னையின் புகழ் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.
அன்புத்தாய் மாரியம்மாள் அவர்களின் இழப்பினால் துயரடைந்து நிற்கின்ற அன்பு அண்ணன் வைகோ அவர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாய் வை.மாரியம்மாள் (வயது 96), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (06) காலமானார். இதையடுத்து, மாரியம்மாள் உடல் திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாரியம்மாள் உடல் சனிக்கிழமை வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கலிங்கப்பட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Average Rating