கூடுவாஞ்சேரி அருகே கழுத்தை இறுக்கி குழந்தை கொலை..!!
கூடுவாஞ்சேரி அடுத்த மகாலட்சுமி நகர் 7–வது பிரிவு பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே முட்புதரில் 8 வயது மதிக்கத்தக்க குழந்தை சாக்கு மூட்டையில் கட்டி எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது.
இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது குழந்தையின் உடல் கருகிய நிலையில் காணப்பட்டது. கழுத்தை கயிறால் இறுக்கி குழந்தை கொலை செய்யப்பட்டிருந்தது. கழுத்தை இறுக்கிய கயிறு கொஞ்சம் எரியாமல் இருந்தது. கொலையுண்ட குழந்தையின் உடல் சாக்கு மூட்டைக்குள் கட்டி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருந்தது.
சாக்கு மூட்டையின் சில பகுதிகள் எரியாமல் அங்கு கிடந்தன. குழந்தையின் உடல் முழுவதும் எரிந்ததால் அது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா என்பது தெரியவில்லை. அந்த குழந்தை யாருடைய குழந்தை என்பது தெரிய வில்லை. அந்த பகுதியில் ஏதாவது குழந்தை காணாமல் போய் உள்ளதா என்று போலீசார் விசாரித்தனர். ஆனால் குழந்தை மாயமான சம்பவம் எதுவும் இல்லை.
எனவே அந்த குழந்தையை வேறு எங்காவது வைத்து கொலை செய்து கூடுவாஞ்சேரி அருகே புதரில் வீசி எரித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொலை செய்யப்பட்ட குழந்தை யாருடையது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எரிக்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Average Rating