நம்பியூரில் இளம்பெண் கொலையில் காதலன் கைது…!!
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி இந்திரா நகர் காலனியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் ரம்யா (வயது 17). இவர் நம்பியூரில் உள்ள ஒரு உள்ளாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்தார்.
இந்த நிலையில் நம்பியூர் சத்தி ரோட்டில் உள்ள சுடுகாட்டில் சம்பவத்தன்று ரம்யா படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். நம்பியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை பற்றி நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் ரம்யா வேலை பார்த்த நிறுவனத்தில் விசாரணை நடத்திய போது அங்கு பணிபுரிந்து வந்த நம்பியூர் அடுத்த எலத்தூர் அம்பேத்கார் நகரை சேர்ந்த விக்னேஷ் (17) என்ற வாலிபர் மீது சந்தேக பார்வை விழுந்தது.
தண்டலூ மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த விக்னேஷை போலீசார் மடக்கி பிடித்து அதிரடி விசாரணை நடத்திய போது ரம்யாவை அவர் தான் கொலை செய்தது தெரிய வந்தது. நான் தான் கொலை செய்தேன் என்பதையும் விக்னேஷ் ஒப்புக்கொண்டார்.
வாலிபர் விக்னேசுக்கும் ரம்யாவுக்கும் கடந்த 8 மாதங்களாக காதல் இருந்து வந்தது. கடந்த வியாழக்கிழமை ரம்யா கம்பெனியில் தீபாவளி வேலை உள்ளது என்று வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் காதலன் விக்னேசுடன் சென்றார்.
சத்தி ரோட்டில் உள்ள ஒரு சுடுகாடு பகுதியில் அவர்கள் உல்லசமாக இருந்தனர்.
அப்போது ரம்யாவிடம் விக்னேஷ், நீ வேறு யாரிடமும் பேசக்கூடாது, பழகக்கூடாது. நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன். என்று கூறினாராம்.
அதற்கு ரம்யா அதை பற்றி நீ ஏன் கேட்கிறாய்? என்று கூறி உள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் ரம்யாவை சரமாரியாக தாக்கினார். அருகில் கிடந்த கல்லை தூக்கி ரம்யா மீது போட்டார். மேலும் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன் பிறகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
Average Rating